மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மத்திய பாஜக அரசின் முதல் நாள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று எட்டாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலங்கள் தோறும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவளிக்கிறேன். விவசாயிகளின் இந்த போராட்டம் கவலையளிக்கிறது. விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்திற்கு கனடா எப்போதும் துணை நிற்கும்” என தெரிவித்திருந்தார்.
கனடா பிரதமரின் இந்த ஆதரவு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர். அதேவேளையில், மோடி அரசின் விவசாய போக்கு, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைக்குனியச் செய்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து, கனட பிரதமர் ட்ரூடோ கருத்து ,உள்நாட்டு விவகாரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கும் பாஜக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த ட்ரூடோவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது போல சிவசேனா கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.