ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று மியான்மர் ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை உலகையே அதிர வைத்த சம்பவம். பல லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக நாட்டைவிட்டு ஓடினர். அகதிகளாகிய பல்லாயிரக்கணக்கானோரை மியான்மர் ராணுவம் கொன்று குவித்தது. இந்த இனப்படுகொலை தொடர்பான வழக்கு திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
காம்பியா நாடு தொடர்ந்த இவ்வழக்கில் ஜனநாயகப் போராளியாக புகழப்பட்ட ஆன்சான் சூகி, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அரசுக்காக அரசின் ஆலோசகராக நேரில் ஆஜரானதால் பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது.
இந்த நிலையில் மியான்மர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ராணுவ வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் திஹேக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், ரோஹிங்கியாக்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும் புதைத்துவிடவும் உத்தரவு வந்ததாகவும்; அதன் அடிப்படையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை படுகொலை செய்ததாகவும் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.