– ரிழா
சென்னையை சேர்ந்த இக்விடாஸ் ஹோல்டிங் மற்றும் இ.ஏ.எஸ்.எப். மைக்ரோ பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்மென்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பத்து தனியார் நிறுவனங்கள் சிறு வங்கி தொடங்குவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. 100 கோடி ரூபாய் முதலீட்டில் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க வகை செய்யும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண மக்கள் வங்கிக்குச் சென்று கடன் பெறுவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் கந்து வட்டி கொடுமையை அனுபவித்து வரும் நிலையில், அதனைப் போக்க இந்த தனியார் வங்கிகள் உதவும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
தனியார் வங்கிகள் சென்னை போன்ற பெரு நகரங்களில், அடியாட்கள் படையை வைத்து கடன் வசூல் செய்தது இந்தப் பொருளாதார நிபுணர்களுக்கு தெரியாததா? அந்தச் செய்திகளையெல்லாம் இவர்கள் படிக்கவில்லையா? என கேள்வியெழுப்புகின்றனர் மாற்று பொருளாதார அறிஞர்கள். கார்ப்பரேட் அடிவருடிகளிடமிருந்து பதில் இல்லை.
பொதுத்துறை வங்கிகளின் சேவைகளை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு பதில், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் தொடங்க அரசு அவசரம் காட்டுவதன் உள்ளர்த்தம் என்ன?
பொதுத்துறை வங்கிகளில் 80 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகையாக உள்ளது. உலகத்தில் வேறு எங்கும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இவ்வளவு தொகை கிடையாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த பெரும் நிதி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வெற்றிகரமாக செயல்படும் பொதுத்துறை வங்கிகளை இழுத்து மூடும் நடவடிக்கையாகவே, தனியார் வங்கிகளின் பெருக்கம் பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் புதிதாக வங்கி தொடங்க, இதுவரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதி வழங்கி வந்த நடைமுறையை மாற்றி, இனி எப்போது கேட்டாலும் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு ‘வங்கி சீர்திருத்தச் சட்டம் 2012’ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு, புதிய வங்கி தொடங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
சென்ற ஆண்டு புதிய வங்கிகளைத் தொடங்க ஆயத்தமானபோது மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டது. நிதிச் சேவைகளை வழங்கி வந்த டாடா, ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா, பஜாஜ் உள்ளிட்ட 27 கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக வங்கிச்சேவை வழங்க அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. தேர்தல் ஆணையம் சமிக்ஞை கொடுத்த உடன், அதில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இந்த ஆண்டு தற்போது பத்து நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அவசர நடவடிக்கைக்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு மாறாக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டும் சரி, இப்போதும் சரி அனுமதி நிராகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கார்ப்பரேட் சகாக்களை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆசுவாசப்படுத்தி வருகிறார். பொதுத்துறை வங்கிச்சேவைகளை மேம்படுத்த விரும்பாத மத்திய அரசு, தனியார் வங்கிகள் தொடங்க ஆர்வம் காட்டுவதேன்?
இந்தியாவில் பரந்த அளவில் வங்கிச் சேவையை விரிவுபடுத்த மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது. சாதாரணமாக தற்போது நடைமுறையில் உள்ளது போலல்லாமல், மக்களின் தேவைக்கேற்ப விதவிதமான வங்கிகள் இனி இந்தியாவில் செயல்படரிசர்வ் வங்கி வழிவகை செய்திருக்கிறது.
வாகனக்கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன், கடன் அட்டைக்கடன், தனிநபர் கடன் என நீங்கள் எதை வாங்க வேண்டும் என விரும்பினாலும், இதற்கென தனித்தனியாக வங்கிகள் உங்களின் வாசற்படிக்கு வந்து கடன் வழங்கத் தயாராகிவிட்டன.
உலகின் மாபெரும் சந்தையாக உள்ள இந்தியாவில், உற்பத்திப் பொருட்கள் தேங்கி, முதலாளிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் திணிக்கும் பணியை, இனி இந்த வங்கிகள் செவ்வனே நிறைவேற்றும்.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவர்களே வங்கிக் கணக்கு வைத்துள்ள நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்டால், முதலாளிகளுக்கு சேவகம் புரியும் அதிகார வர்க்கத்தின் தன்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான நெறிமுறைகளை எளிமைப்படுத்திய கையோடு, வங்கி பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடையும் அறிவிப்பு ஒன்றையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வங்கிச் சேவையைத் தொடர வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்க இனி அவசியமில்லை என்பதுதான் அந்த அறிவிப்பு. தனியார் வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வைப்புத்தொகை அளவு, பொதுத்துறை வங்கிகள் நிர்ணயித்துள்ள தொகையைவிட பன்மடங்கு அதிகமாகும். இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, வங்கிகளின் பக்கம் பொதுமக்களை இழுக்க பாதை அமைத்துக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
சில காலங்களுக்கு முன்பு செல்போன் பயன்பாட்டை அதிகரிக்க ஏ.டி.ஏ.ஜி. நிறுவனம்(ரிலையன்ஸ்) ரூபாய் 500க்கு செல்போன் விற்பனை செய்ததை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. இப்போது நம்முடைய சட்டைப் பையில் ஐந்து ரூபாய்கூட இருக்கக்கூடாது என நினைக்கின்றனர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். செல்போன் நுகர்வுக்கு அடிமையாக்கிய பின், ஐந்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பையும் வழங்கி, மக்களை மயக்க நிலையிலேயே வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். அரசிடமிருந்து அலைக்கற்றையை சொற்ப விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன இந்த பகாசுர நிறுவனங்கள்.
இந்த அம்பானி செல்போன் உதாரணம் மூலம் உங்களுக்கு ஒரு சித்திரம் உதயமாகியிருக்கும்… சாலை ஓரங்களில், பெரிய குடையை விரித்து வைத்துக் கொண்டு சிம் கார்டு வழங்குவது போல், வங்கிக்கணக்கு உடனடியாக தொடங்கித் தரும் காட்சிகள் அங்கிங்கெனாதபடி இனி எங்கும் வியாபித்திருக்கும்.
இதைத்தான் நாம் ‘அமெரிக்கா பாணியிலான வல்லரசு இந்தியா’ என அழைக்கிறோம். நிதிமூலதனத்தின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக, அதன் நுகத்தடியில் எப்படி அரசியல் கட்சிகள் பூட்டப்படுகின்றன என்பதை தேர்தல் காலங்களில் அறிய முடிகிறது.
அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்காக கார்ப்பரேட் வங்கி நிறுவனங்கள் வாரியிறைக்கின்றன. மக்களிடம் இரண்டு கட்சிகளும் செல்வாக்கு செலுத்துவதற்கான பணிகளை தனியார் வங்கிகள் தங்களது கடமைகளாக ஏற்று நிறைவேற்றுகின்றன. இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான நிதிக் கொள்கைகளை உருவாக்கி, அமெரிக்க அரசு தனது நன்றி விசுவாசத்தை காட்டி வருகிறது.
கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் கார்ப்பரேட் அரசு என அமெரிக்க அரசாங்கத்தை, அந்நாட்டின் குடிமக்களில் 10ல் 7 பேர் புரிந்து வைத்துள்ளனர்.
இந்தக் காட்சிகளை தற்போது இந்தியாவில் பட்டவர்த்தனமாக காண முடிகிறது. காலம்காலமாக முதலாளிகளுக்கு சாமரம் வீசிவந்த காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது இந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் பின்புலம் கொண்ட பாரதிய ஜனதா கட்சி. ஓராண்டுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சியால் தேர்தல் அறிக்கையை உரிய காலத்தில் வெளியிட முடியவில்லை. ஆனால், பிரம்மாண்டமான அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
மக்களிடம் அந்தக் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்க ஒரு மாய உலகமே இயங்கியது. ‘வட்டச் செயலாளர்’ வண்டு முருகன் பாணியில் பேசிய கார்ப்பரேட்டுகளின் கடவுளான நமோ, சொகுசு விமானத்தில் வலம் வந்து இந்தியாவின் எந்த மூலையில் உள்ள பக்தர்களுக்கும் காட்சி தந்தார். கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் கார்ப்பரேட் அரசு என அமெரிக்க அரசாங்கத்தை, அந்நாட்டு குடிமக்கள் உணர்ந்து கொண்டது போல இந்தியர்கள் எப்போது உணர்ந்து கொள்வார்கள்?
தனியார் வங்கிகளுக்கு சாதகமாக மத்தியில் உருவாகும் அரசு செயல்படும் அதே வேளையில், தனியார் வங்கிகளின் பெருக்கத்தால் இறுதியில் என்ன விளைவு ஏற்படும்? வங்கிகள் வழங்கிய கடன்களை பொதுமக்கள் திரும்ப செலுத்த முடியாமல் திணறியபோது, கடன் கொடுத்த வங்கிகள் திவாலாகும் நிலை அமெரிக்காவில் ஏற்பட்டது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட இந்தச் சிக்கலின்போது, அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கி வங்கிகளைக் காப்பாற்றியது. சுமார் 700 பில்லியன் டாலர்களைக் கொடுத்து, திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளை கைதூக்கி விட்டது அமெரிக்க அரசு. எல்லாமே மக்கள் வரிப்பணம்தான்.
இந்த நிலை இந்தியாவில் ஏற்பட எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என சொல்ல முடியாது. ஆனால், விளைவு கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தனியார் வங்கிகள் திவாலாகும் நிலை இந்தியாவில் ஏற்பட்டால், மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகள் காப்பாற்றப்படுவார்கள். ஏற்öகனவே மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதிகளை அரசு வெட்டிவரும் நிலையில், மேலும் மேலும் சமூகநலத் திட்டங்கள் கைவிடப்படும் மோசமான சூழல் உருவாகும்.
தனியார் வங்கிகள் தொடங்க குறைந்தபட்சம் 100 முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது எனில் இந்த வங்கிகள் திவாலாகும் நிலையை அடைந்தால், மக்களின் வரிப்பணம் எவ்வளவு தனியார் முதலாளிகளின் பாக்கெட்டுக்குள் போகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் ஆறு லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனை வசூலிக்க அரசு அக்கறை காட்டாத நிலையில், வராக்கடன் பட்டியலில் உள்ள சில நிறுவனங்களே வங்கிகள் தொடங்கும் அபாயமும் உள்ளது.
ஜெர்மனியின் பொருளாதார அறிஞர் ஒருவர் இதனைத்தான் இப்படி வர்ணித்தார். ஒரு வங்கியில் கொள்ளையடிப்பதைவிட, ஒரு வங்கியை அமைத்து கொள்ளையடிப்பது எளிமையான செயல்.
You must be logged in to post a comment.